கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்காக 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்தும் அளவுக்கு 825 அரசுக் கட்டடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளை அதிகப்படுத்தும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக
மாவட்ட வாரியாக எத்தனை கட்டடங்கள் தயாராக உள்ளன என்பது குறித்த விவரங்களைப் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக தஞ்சாவூரில் 70 கட்டடங்களும், கரூரில் 67 கட்டடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களில் முறையே 5245, 2488 படுக்கைகளை ஏற்படுத்த முடியுமென பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 38 மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறைக்கான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக 825 கட்டடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களின் மொத்த பரப்பளவு 14 லட்சத்து 6 ஆயிரத்து 378 சதுர மீட்டராகும். இந்த பரப்பளவில் மொத்தமாக 50 ஆயிரத்து 852 படுக்கைகளை ஏற்படுத்த முடியுமென பொதுப்பணித்துறை மதிப்பிட்டுள்ளது.