சென்னை: வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் அமைந்திருக்கும் கடையில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக, குறிப்பிட்ட நாட்களில் ஃபீனிக்ஸ் மால் கடைக்கு வந்தவர்கள் தகவல் தருமாறு சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று புதிதாக வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், வேளச்சேரியில் இயங்கும் ஃபீனிக்ஸ் மால் கட்டடத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஃபீனிக்ஸ் மாலில் உள்ள குறிப்பிட்டகடைக்கு மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்றவர்கள் மற்றும் அந்த தளத்தில் அமைந்துள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி கோருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் கடைக்கு வந்தவர்கள் 044 - 2538 4520 / 044 4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.