முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், மத்திய பாதுகபாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மேலும் தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது, முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையன நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். கரோனா பரிசோதனை உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும். 2019-20 ஆண்டு டிசம்பர்-ஜனவரிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனே விடுக்க வேண்டும்.
2020-21 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதேபோன்று கரோனா தடுப்புப் பணிகளுக்கு தமிழகம் கோரிய ரூ.9000 கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் முதல்வர் அப்போது கேட்டுக்கொண்டார்.