பிரதமர் பேச்சில் தான் அதிகம் எதிர்பார்த்தாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் வெள்ளிக்கிழமை காலை உரையாடினார். அப்போது, வரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில், அகல் விளக்கு அல்லது டார்ச் அல்லது செல்லிடப்பேசி அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். இவ்வாறு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவட்டரில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.