தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடைகள் நேரக் கட்டுப்பாட்டுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பான் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தைக்குக் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.