தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக, சேலத்தில் 104 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பநிலை வெயில் கொளுத்துகிறது. இதேநிலை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 104 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. கரூா் பரமத்தியில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரையில் தலா 101 டிகிரியும், மதுரை விமானநிலையம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். மதுரை, திருச்சிராபள்ளி, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவள்ளூா் ஆகிய இடங்களில்
சனிக்கிழமை (ஏப்.4) வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். பகலில் 95 பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை காணப்படும் என்றாா் அவா்.