தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். கருணாநிதி வேடத்தில் இருவர் கரோனா குறித்து ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல, தன்னார்வலர்களும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் யாகப்பா நகரில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி வேடமணிந்த இருவர், தடையுத்தரவை மீறி வெளியில் வலம் வருபவர்களிடம் கரோனா பாதிப்பு குறித்தும், அந்தப் பாதிப்பைத் தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவர்களில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் குரு சரண் எம்.ஜி.ஆர். வேடமணிந்து, அவரைப் போலவே பேசி பொதுமக்களைக் கவர்ந்தார். கருணாநிதி வேடமணிந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் துரை. இவர்களுடன் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ராம. பழனியப்பன், இந்து மக்கள் கட்சி இளைஞரணி செயலர் பி. கார்த்திக்ராவ் உடன் இருந்தனர்.