சென்னை: கரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இதுவரை 571 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 5 பேர் இதுவரை கரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரோனா சிகிச்சைக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் மேல்மருவத்தூர்அருகில் இயங்கும் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.