மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலி

மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலியானார். 
மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலி

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கடைவீதியில் பல ஆண்டுகளாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் அப்துல்ரஹீம் (70). இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகளை திறக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்துல் ரஹீம் கோழி விற்பனை செய்ய கடையை  திறந்துள்ளார். 

அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் கடையை மூடச் சொல்லியும், கடையின் முன் இருந்தவர்களையும் கிளம்ப படி கூறியுள்ளனர். இதை அப்துல் ரஹீம் உறவினர் ஒருவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதை தடுக்கச் சென்ற போது அப்துல் ரஹீம் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அப்துல் ரஹீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்துல் ரஹீம் உடலை கருப்பாயூரணி கடைவீதியில் சாலையின் குறுக்கே வைத்து அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அப்துல் ரஹீமை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கருப்பாயூரணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com