பொதுவாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உணவு என்றால் பெரும்பாலும் புளிச்சோறு, தயிர்ச்சோறு, தக்காளிச் சோறு என்ற பட்டியலைக் கொண்ட பொட்டலச் சோறாகத்தான் இருக்கும். அண்மைக்காலமாக குஸ்கா பிரபலமாகியிருக்கிறது.
ஆனால், புதுக்கோட்டையில் ஓர் ஆச்சர்யம் தொடர்ந்து 10 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடந்தேறியது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே தினக்கூலிப் பணியாளர்களின் நிலை என்னாகும் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டது.
அப்படியான ஒரு இடத்தை தன்னார்வலர்களான இளைஞர்கள் விவேக், நியாஸ் ஆகியோர் தேர்வு செய்தனர்.
புதுக்கோட்டை நகரிலுள்ள கீழ ஆறாம் வீதியில் கூலித் தொழிலாளர்கள் 30 குடும்பங்கள் வசிக்கும் பகுதி தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து தினமும் மூன்றுவேளையும் உணவு அந்தப் பகுதிக்கே எடுத்துச் சென்று வழங்கப்படுகிறது. உணவென்றால் கடமைக்கான உணவல்ல.
10ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) பகலில் என்ன உணவு தெரியுமா. சோறு, ஆட்டுக்கறிக் குழம்பு, குடல் மசாலா, ரத்தப்பொரியல், அவித்த முட்டை.
6ஆவது நாளில் மீன் வறுவல்- மீன்குழம்புடன் சோறு.
இதற்கிடையே தக்காளிச் சோறு, புதினா சட்னி, வாழைக்காய் கூட்டு, புளிச்சோறு, உருளைக் கிழங்கு வறுவல், அவித்த முட்டை, சேமியா கிச்சடி, தக்காளித் தொக்கு, சோறு, மோர்க் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, பூரி, உருளைக் கிழங்கு மசால், இட்லி, சட்னி... எனக் களை கட்டுகிறது புதுக்கோட்டை கீழ 6ஆம் வீதி கூலித் தொழிலாளர் குடியிருப்பு.
ஊரடங்கு உத்தரவென்றால் அன்றாடம் உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என ஏங்கிக் கிடந்த எங்களுக்கு எந்த வித குறையும் தெரியாமல்- ஊரடங்கு என்ற ஒன்று உலகில் நடப்பதே தெரியாமல் எங்களைப் பாதுகாத்து வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உதவும் உள்ளம் கொண்ட நல்ல நண்பர்கள் எங்களுடன் இருப்பதுதான் இந்தப் பணிக்கான அடிப்படை. எங்கள் வீட்டுப் பெண்களே உணவைத் தயாரிக்கிறார்கள் என்பதால் வேலை எளிதாகிறது. செலவும் குறைகிறது என்கிறார் நியாஸ்.