கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிராமம் கூடமலை. ஆத்தூரிலிருந்து கெங்கவல்லி வழியே தம்மம்பட்டி, துறையூர் செல்லும் அனைவரும் கூடமலையை கடந்துதான் செல்லவேண்டும்.
தற்போது லாரி, பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையில் போக்குவரத்தே இருப்பதில்லை. இப்பகுதியைக்கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் கூடமலையைச்சேர்ந்த இளைஞர்களுக்குத் தோன்றியது.
அதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து டிராக்டரில் பிளாஸ்டிக் டிரம்களில், தம்மம்பட்டி செல்லும் சாலையில் உப்பாத்துஓடை என்னுமிடத்தில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டும், சாலையின் குறுக்கே ஒரு தடுப்புக்கட்டையை அமைத்துக்கொண்டு, நாற்காலிகள் போட்டு, சாலையிலேயே அமர்ந்துகொண்டனர். அந்த வழியே வந்து, செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் நிறுத்தி, அவர்களது கைகளை சோப் தண்ணீரில் கழுவச்செய்கின்றனர்.
மேலும் அவர்கள் வந்த வாகனங்களின் கைபிடிகளில் கிருமிநாசினி தெளித்தும் அனுப்பிவைக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறும்போது,எங்கள் ஊரும் நன்றாக இருக்கவேண்டும். எங்கள் ஊரைக் கடப்பவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். தினந்தோறும் இப்பணியைச் சேவை நோக்கத்துடன், சுழற்சி முறையில் செய்துவருகின்றோம் என்றனர்.