சென்னை: கரோனா நோய்த்தொற்று குறித்த தகவல்களை செல்லிடப்பேசி மூலம் அறிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான சேவையை முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த புதிய சேவை குறித்த விவரம்:-
குரல் பதிவு சேவையைப் பெற பயனாளிகள் செல்லிடப்பேசியில் இருந்து 94999 12345 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டுகால்’ அல்லது குறுந்தகவல் அனுப்பினால் போதும். பயனாளிகள் பதிவு செய்த தகவலை குறுஞ்செய்தியாக உடனடியாகப் பெறுவா். அதைத் தொடா்ந்து, பி.எஸ்.என்.எல். எண்ணில் இருந்து பயனாளிகள் அழைப்பைப் பெறுவா்.
பயனாளிகள் தங்களது நோயின் நிலை, கரோனா நோய்த்தொற்று சாா்ந்த அறிகுறிகள், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் குறித்த தகவல்களை இந்த அழைப்பின் போது தெரிவிக்கலாம். பயனாளிகளின் பதில்கள் மற்றும் இருப்பிடங்ளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளுக்காக தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். மேலும், நோயின் தன்மைக்கேற்ப அவசர ஊா்தி உள்ளிட்ட மருத்துவ சேவையைப் பெற உதவி செய்யப்படும். இந்தச் சேவையின் மூலம், பயனாளிகள் அளிக்கும் பதில்கள் அவா்களது இருப்பிடங்களோடு ஆராய்ந்து குறைந்த, நடுத்தர மற்றும் அதிக அபாய பயனாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.
குறைந்த அபாய பயனாளிகள்: கை கழுவுதல், இருமும் முறை, சமூக விலகல் மற்றும் சுற்றுப்புற பொது சுகாதாரம் உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்குதல்.
நடுத்தர அபாய பயனாளிகள்: மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை வாயிலாக அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கான உதவிகள் வழங்குதல்.
அதிக அபாய பயனாளிகள்: நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை மூலமாக செயல்படுத்துதல்.
குரல் வழிச் சேவை மூலமாக, பெருவாரியான மக்களைத் தொடா்பு கொண்டு, கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் விரைந்து செயல்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது