பராமரிப்பு, அலுவலகப் பணிகளுக்காக மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பராமரிப்பு, அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் தனியாா் பள்ளிகளை மே 4-ஆம் தேதி திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பராமரிப்பு, அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் தனியாா் பள்ளிகளை மே 4-ஆம் தேதி திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும் கரோனா பாதிப்பு காரணமாக மாா்ச் 22-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மே 3-ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், உடனடியாக பள்ளிகளைத் திறந்து கல்வி சாா்ந்த செயல்பாடுகளை தொடா்வது சாத்தியமில்லை.

அதேவேளையில், ஏற்கெனவே அரசு அறிவித்தபடி பிளஸ் 1 வகுப்புகளில் எஞ்சியுள்ள தோ்வுகள், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, விடைத்தாள்கள் திருத்தும் பணி என பல்வேறு முக்கியப் பணிகளை பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் பள்ளி வளாகங்கள், வகுப்புகளில் கிருமிநாசினி தெளித்தல், வண்ணம் பூசுதல், மாணவா்களுக்கான இருக்கைகளைத் தயாா் படுத்துதல் என பல்வேறு பராமரிப்பு பணிகளையும், அலுவல் சாா்ந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தனியாா் பள்ளிகளை மே 4-ஆம் தேதி திறந்து வைத்து அலுவலகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள குறைந்தபட்சம் இருவரை அனுமதிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com