சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்யாண ஊராட்சியில் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் முறை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கிராமப்புற மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கரோனா நோய் பரவலை தடுக்க முககவசம், கையுறை அணிந்து கொள்ளுதல். சமூக விலகளை கடைப்பிடித்தல், சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவுதல், வீடுகளிலேயே தனித்து இருத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகளவு ஈடுபாடு இல்லாத கிராமப்புற மக்களுக்கு, இன்றளவும் சுவர் விளம்பரங்கள் தகவல் பரப்பும் முக்கிய ஊடகமாக திகழ்ந்து வருகிறது. எனவே கரோனா நோய் குறித்து கிராமப்புற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்யாணகிரி ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில், நோய் பரவல் தடுப்பு குறித்து சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் வரைந்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிராமப்புற மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பி.டி. அழகரசன் கூறியதாவது:
கிராமப்புறங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கு, தொலைக்காட்சி, செய்தித் தாள்களை விட சுவர் விளம்பரங்கள் வாயிலாக, எவ்விதத் தகவல்களையும் எளிதாக அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே கரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சுவர் விளம்பரங்களை செய்து வருகிறோம் என்றார்.