தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தமிழக அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணியினை ஆய்வு செய்வதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி கருணாகரனை தமிழக அரசு நியமித்திருந்தது.
அதன்படியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகளை மூத்த ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன் இன்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை சென்ற அவர், கரோனாவிலிருந்து மீண்ட 5 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கரோனாவிலிருந்து குணமடைந்த அவர்களை மருத்துவக்குழுவினர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 5 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 13 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். கரோனாவிலிருந்து மீண்டு இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் காயல்பட்டணத்தை சேர்ந்த 4 பேர், தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.