சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக  உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 
சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு: மாநகராட்சி அறிவிப்பு


சென்னை  மாநகராட்சிப் பகுதியிலுள்ள 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக  உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில், மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் தமிழக அரசு அம்மா உணவகம் எனும் பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறது. இதில், தொழிலாளா்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனா். அம்மா உணவகங்களுக்கான நிதியும், உணவுப் பொருள்களும் பல்வேறு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்கள், இந்த அம்மா உணவகங்களைப் பயன்படுத்தி வருகின்றனா். 

சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு உதவியாக இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

இதனை கண்டித்த எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் உத்தரவின்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முழுச் செலவையும் அந்தந்த மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டு அதற்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களின் இடம், பெயர், தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இலவச உணவு தர பல நன்கொடையாளர்களர் நிதி அளித்துள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி இந்த ஏற்பாடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com