அறிவிப்புகள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமே தவிரப் பதற்றத்தை உருவாக்கக்கூடாது: சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் காவல் துறையின் சார்பில் செய்யப்படும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களிடையே விழிப்புணர்வை

மதுரையில் காவல் துறையின் சார்பில் செய்யப்படும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமே தவிரப் பதற்றத்தை உருவாக்கக்கூடாது என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை அறிக்கை விடுத்துள்ளார். 

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது..

மதுரையில் கரோனோ தொற்று சமூகப்பரவல் நிலையை எட்டிவிட்டதோ என்று சந்தேகம் வருகின்ற அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்வது வரவேற்புக்குரியது. ஆனால், இம்முடிவினையொட்டி நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையும் காவல் துறையின் சார்பில் வெளியான ஆடியோ குரல் பதிவும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுரையில் பொதுவெளியில் சுற்றுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உண்மைதான். அதனைக் கட்டுக்குள் கொண்டுவரச் சரியான முயற்சிகள் தேவை. அதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் திசைதிருப்பப்பட்டுவிடக் கூடாது. அரசுப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான அனுமதிபெற்றவர்கள் என சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் இருசக்கர வாகனத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் மறுநாள் காலை இருசக்கர வாகனத்துக்கான அனுமதியைப் பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் என முந்தைய நாள் இரவு அறிவிப்பு வெளியிடுவது எந்தவகையில் பொருத்தமான செயல்?

இவ்வளவு பேருக்கும் ஒரே நாளில் அனுமதி கொடுப்பதற்கான நிர்வாக ஏற்பாட்டினை உறுதிசெய்யாமல், இந்த அறிவிப்பைச் செய்திருக்கக் கூடாது. அதுவும் ஆட்சியரின் அலுவலகத்திலேயே இவ்வளவு கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சமூக பரவலாக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்படும் அறிவிப்புகளின் விளைவு அதற்கு எதிர்மறையான செயல்பாட்டுக்கே வழிவகுத்திருக்கிறது.

அதேபோன்று காவல் துறையின் சார்பில் செய்யப்படும் அறிவிப்புகள், முறையாக உயர் அதிகாரியால் மட்டுமே பொது ஊடகங்களில் பகிரப்பட வேண்டும்; அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கட்செவி அஞ்சலில் குரல்பதிவினை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும். மதுரையில் கரோனா தொற்றின் சமூகப்பரவல் நிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து பொதுவெளியில் இருப்பது நிர்வாகத்துக்குப் பதட்டத்தையும், அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அதிலிருந்துதான் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். நிலைமையைப் புரிந்து கொண்டு முழுமையாக ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com