கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதயொட்டி ஞாயிற்றுக்கிழமை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 23 முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தோற்று அதிகரித்துவரும் மதுரை , கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவையொட்டி மருத்துவமனைகள் மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் எதுவும் இன்றி மயான அமைதியுடன் காணப்பட்டது. மேலும் நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவை ஒட்டி அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மருந்து விநியோகம், பால் வினியோகம், உணவு விநியோகம் ஆகிய வாகன நடமாட்டம் மட்டுமே இருந்தது.
மேலும் நகரின் உள்பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் தெருக்களிலும் வாகன போக்குவரத்து, ஜன நடமாட்டம் எதுவும் இல்லை. சாலைகளில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சி வாகனங்கள் காவல்துறையினரின் நடமாட்டம் மட்டுமே இருந்து வந்தது. எப்போதும் வாகன போக்குவரத்து ஜன நடமாட்டம் ஆகியவற்றுடன் காணப்படும் மதுரை மாநகர் ஜனநடமாட்டம் வாகனங்கள் எதுவும் இன்றி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது வித்தியாசமான காட்சியாக அமைந்திருந்தது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முழு ஊரடங்கு புதன்கிழமை இரவு 9 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.