முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரம் ஆள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் திருப்பூர், சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, இந்த 5 மாநகராட்சிகளில் நோய்த்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை திருப்பூர், சேலம் மாநகராட்சி பகுதிகளிலும், மாற்ற மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்குவந்தது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் ஆள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
மேலும், மளிகை, காய்கறி கடைகள், மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
அதே வேளையில் அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையம் ஆகியவை மட்டும் திறக்கப்பட்டிருந்தது. மாநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், மாநகரில் அவ்வப்போது வாகனச் சோதனைகள் நடத்தி விதிகளை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆகவே, தமிழக அரசின் முழு ஊரடங்கிற்கு திருப்பூர் மாநகர மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.