ஈரோடு: ஊரடங்கை மீறியதாக ஈரோட்டில் ஒரே நாளில் 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரோனாவை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் தடை உத்தரவு அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பெயரில் 1600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் தடுப்பு வேலிகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே சுற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் வெளியில் சுற்றி வருகின்றனர். தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எஸ்பி அறிவித்திருந்தார்.
இதையடுத்து தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் தடை உத்தரவை மீறியதாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 403 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 45 கார்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள், 350 இருசக்கர வாகனங்கள் அடங்கும்.