ஈரோடு: கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு குறியீட்டு மண்டலத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக மொத்தம் 70 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் எஞ்சிய 69 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டனர்.
இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி முதல் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 70 பேர் பாதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து வந்தது.
கடந்த 15 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக கரோனா நோய் தொற்று எதுவும் மாவட்டத்தில் உறுதிபடுத்தப்படாததால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக அறிவிக்கப்பட்டு மாநில வரைபட பட்டியலில் நிறம் மாற்றம் செய்யப்பட்டது.
இனிவரும் நாட்களில் கடைகள், தொழிற்சாலை, வாகன இயக்கம், போக்குவரத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தளர்வு போன்ற நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்படாவிட்டால், பச்சை மண்டலத்திற்கு மாற்றப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.