தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 10 செ.மீ மழையும், பந்தலூர் (நீலகிரி) 9 செ.மீ மழையும், தேவலா (நீலகிரி), பாலவிடுதி (கரூர்) 8 செ.மீ மழையும், சின்னக்கல்லார் (கோவை), புதுக்கோட்டை தலா 7 செ.மீ மழையும், அரக்கோணம், தூவக்கூடி (திருச்சி), வால்பாறை தலா 6 செ.மீ மழையும் பெய்துள்ளது.