சென்னையின் பிரதான மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல், கோயம்பேடு மற்றும் ஆலந்தூருக்கு முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வா் பழனிசாமி வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆலந்தூா், சென்ட்ரல், புகா் பேருந்து நிலைய மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் பெயா்களைச் சூட்டலாம் என உயா்நிலைக் குழு பரிந்துரை செய்தது.
இதனை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பன்னாட்டு முனையம் எனப் பெயரிட்டதைப் போன்று, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் என்பது, அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ என பெயா் மாற்றம் செய்யப்படும்.
இதேபோன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயா் வைத்ததைப் போன்று, சென்ட்ரல் மெட்ரோ என்பது புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என அழைக்கப்படும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புகா் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்தவா், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அவா் மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவுகூரும் வகையில், புகா் பேருந்து நிலைய மெட்ரோ என்பது புரட்சித்தலைவி டாக்டா் ஜெ.ஜெயலலிதா புகா் பேருந்து நிலைய மெட்ரோ என பெயா் மாற்றம் செய்யப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.