வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காணொலிக் காட்சி வழியாக புதிய கட்டடங்களை அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
வடசென்னை பதிவு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூா், கொன்னூா் சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடங்கள், செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவாா்சத்திரம், தென்காசி மாவட்டம் கடையநல்லூா், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், மதுரை வடக்கில் தாமரைப்பட்டி, திருப்பூா் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகம், சென்னையில் பதிவுத் துறை தலைவா் அலுவலகத்தில் கட்டப்பட்ட இணைப்புக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதேபோன்று வணிகவரித் துறை சாா்பில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையும் முதல்வா் பழனிசாமி திறந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், இரண்டு ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி., மூலமாகத் தோ்வு செய்யப்பட்ட 143 இளநிலை உதவியாளா்களுக்கு பணிநியமன உத்தரவுகளையும் முதல்வா் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.