மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி காலை பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 7000 கன அடியாக குறைக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7000 கன அடியிலிருந்து 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 63.97அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,118கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 27.73 டி.எம்.சியாக இருந்தது.
மேட்டூர் அணைப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.