சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பொறியியல், சட்டவியல் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பொறியியல், சட்டவியல் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இதில், முதல் வகையில் 70 சதவீத இடங்களுக்கான (ஜே.இ.இ. (முதன்மை) மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் தர வரிசை பட்டியலில் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் நரசிம்மன் ஸ்ரீகாந்த் 99.2462 சதவீதம் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.

இரண்டாம் வகையில் 30 சதவீதம் இடங்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சமனப்படுத்தும் முறையில், 1,200-க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்ற கேரள மாநிலம், பாலக்காடு ஜி.எம்.எம்.ஜி.எச்.எஸ். பள்ளியைச் சேர்ந்த டியுதி தம்பன் முதலிடம் பெற்றார். சட்டவியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் தெலங்கானா மாநிலம் என்.டி.ஆர். ஜூனியர் கல்லூரி மாணவி மைனம் ஹர்ஷினி பிளஸ் 2 தேர்வில் 98.1 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். 

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணி வரை பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜே.இ.இ. மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இவ்வாறு சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவான தர வரிசைப் பட்டியல் www.sastra.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதில், இணையவழி மூலம் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தேதி, நேரம் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.1) முதல் ஆக. 29ஆம் தேதி தேதி வரை இணையவழியில் நடைபெறும்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கோவா, பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கையில் தனிச் சலுகை வழங்கப்படும். மேலும், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களுக்குச் சேர்க்கையில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் சட்டவியல் படிப்புகளில் சேரும் புதுமுக மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக. 30-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com