இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட புரசைவாக்கத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சித்த மருத்துவ பெட்டகத்தையும், தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம், மல்டி வைட்டமின் மாத்திரை, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினார். இதை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பொன்னாடை பேர்த்தியும், பூக்கள் மற்றும் புத்தகம் அளித்தும் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கெளரவப்படுத்தினார். இதை தொடர்ந்து களப்பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
2 மாதத்திற்கு முன்பு தலைநகர் சென்னையில் எப்படி வாழ்வது என கேள்வி விவாத பொருளாக மாறிய போது, சென்னையின் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் கொண்டு முதல்வர் ஒரு வித்தியசமான அணுகுமுறையை மேற்கொண்டு, அதன் உங்களை போன்ற தன்னார்வலர்கள் களப்பணியாற்றி மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்த தன் காரணமாக இன்று சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. தொடர்ந்து சோர்வின்றி களப்பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இதை தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருவிக மண்டலத்தில் இதுவரை 8085 பேர் பாதிக்கப்பட்டு அதில் 6,603 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் உள்ள 2300 தெருக்களில் 1850 தெருக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கை காரணமாக 573 தெருக்களில் மட்டுமே தற்போது பாதிப்பு உள்ளது. 400 வரை பரிசோதனை மேற்கொண்டு இருந்த நிலையில் தற்போது 540 ஆக பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கரோனா தொற்றத்தை கட்டுபடுத்தும் விதமாக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமில்லாது, கடந்த காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு கரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
வரும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக பள்ளி கல்வி துறை அமைச்சர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி உள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறையுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாணவன் நலன் காக்கும் தமிழர் நலன் காக்கும் வகையில் கொள்கை முடிவை முதல்வர் அறிவிப்பார். இபாஸ் பொறுத்தவரை சரியான காரணங்களின் அடிப்படையில் அரசு வழங்கி வருகிறது.
மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தாலும், மாநில அரசு அதனை பின்பற்றியே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கரோனா தொற்று விரியம் கட்டுக்குள் உள்ள நிலையில் மாவட்டத்திற்குள் இ பாஸ் இல்லாமலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது இபாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இபாஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் மனித நேயத்துடனும், மனசாட்சியுடனும் அணுக வேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறது. இ பாஸ் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இபாஸ் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாக்கபடுவார்கள். தற்போது தொற்று பரவுவது தமிழகத்தில் படிபடியாக குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து ஆய்வு மேற்தொண்டு மேலும் தளர்வுகளை படிபடியாக அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சகஜ நிலை திரும்பிய பின் இ சேவை மையங்கள் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.