திருப்பூர் அருகே கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி, காரில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் அருகே உள்ள புளியாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(69). இவரது மனைவி பாப்பாத்தி(59). இருவரும் கொடுவாயில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் சாமிநாதனின் இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் வந்த கல்லூரி மாணவரான சுபாஷ் (22) என்பவரும் உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் 4 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொல்லிகாளிபாளையம் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.