கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டம் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரானா தொற்று பாதிப்பால் கொடைக்கானலில் பொதுமக்கள் அச்சமடைந்து எந்த பணிகளையும் முழுமையாக செய்ய முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி.பட்டி, பெரும்பாறை, கெளரவநாச்சி ஓடை,பாச்சலுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது வாழை, பலா, அவக்கோடா, அவரை உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராகி வருகின்றன.
இதனால் வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களில் விளைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு யானைக்கூட்டம், பன்றி, காட்டெருமைகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது.
இதனால் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அவற்றை வெளி சந்தைக்கு அனுப்ப முடியாமலும் விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வனவிலங்குகள் தற்போது விவசாயப் பகுதிகளில் முற்றுகையிட்டு பழங்கள்,காய்கறிகளை அழித்து நாசப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் உயிருக்கு பயந்து விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அச்சமடைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இது குறித்து பெரும்பள்ளம் சரகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர்ந்து, மழை பெய்து வருகிறது. எனவே இந்த வன விலங்குகள் உணவைத் தேடி விவசாய பகுதிகளுக்கு வருகின்றன. இருப்பினும் வனத்துறை மூலமாக காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளோம்.” என்றார்.
ஏற்கனவே கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரங்களை இழந்து சிறு,குறு விவசாயிகள் வறுமையில் வாடிவருகிறோம்.சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்பது கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் கோரிக்கையாகும்.