சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான உத்தரவுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:-
கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 3 ஆயிரத்து 422 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவற்றில் கணக்கர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட சில பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் 114 இளநிலை உதவியாளர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு பணிநியமன உத்தரவுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, கூடுதல் இயக்குநர் சித்ரா ஜான் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.