சென்னை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான் நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சுட்டுரையில் கூறியிருப்பது:
கரோனா தொற்றுக்கான சிறிய அறிகுறிகள் உள்ளதால் மருத்துவர்களின் அறிவுரைகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ப.சிதம்பரம் தனது சுட்டுரையில் கூறியிருப்பது: கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் தன்னை சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக உள்ளார். நான் சிவகங்கை தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான நல விசாரிப்புகளுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.