தமிழகத்தில் மொழித் திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை அல்ல என தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றுள்ளது. எனினும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; மும்மொழிக்கொள்கை அனுமதிக்கப்படாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன், 'மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள்' என்று கூறினார்.
இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எல். முருகனின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.
எண்ணூரில் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 'தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். கடந்த 80 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டுள்ளது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கடைப்பிடித்த கொள்கையைத்தான் முதல்வர் பழனிசாமியும் கடைபிடிக்கிறார். நாங்கள் மொழித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். மாறாக, மொழியை கற்றுக் கொள்வதை எதிர்க்கவில்லை' என்று பேசியுள்ளார்.