சென்னை: வங்கிகளில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் பொது முடக்கம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வங்கி நிர்வாகங்களும் இதற்கான எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதற்கிடையில், 100 சதவீதம் ஊழியர்களுடன் வழக்கமான சேவையில் வங்கிகள் ஈடுபடும் என்று தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அதிகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தொற்றால் இறந்துள்ளனர். மன அழுத்தம், பதற்றம், பயம் மற்றும் கவலையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
கர்ப்பிணி ஊழியர்களும் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குகின்றனர்.
இந்நிலையில், 100 சதவீதம் ஊழியர்களுடன் வழக்கம் போல் செயல்பட்டால், கரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வங்கி வணிக நேரத்தை, காலை 11 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை குறைக்க
வேண்டும்.
வங்கிகளில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.