யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. காலியாக உள்ள 829 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7 ஆம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இருவரும் தேர்ச்சி ஆகியுள்ளனர்.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றியடைந்த தமிழக மாணவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
கணேஷ்குமார் பாஸ்கர், ஐஸ்வர்யாவின் சிறப்பிடங்களும் மாற்றுத்திறனாளிகள் பூர்ணசுந்தரி, பால நாகேந்திரன் வெற்றியும் மகிழ்ச்சிக்குரியது!
வாய்ப்பு கிட்டாதவர்கள் சோர்ந்துவிடாமல் உறுதியுடன் முயற்சியுங்கள்!' என்று பதிவிட்டுள்ளார்.