சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா இருப்பது ஆகஸ்ட் 2-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல்நலத்துடன் இருப்பதாக அவரது உடல்நலனைக் கண்காணித்து வரும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, இயல்பாக செயல்படுகிறார், நலமாக இருக்கிறார்.
அவரது உடல்நலனை காவேரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2-ம் தேதி திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு லேசான தொற்று இருப்பதாக கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.