இ-பாஸ் நடைமுறையை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன. நெல்லையில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படும்.
திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 2021ம் ஆண்டு இறுதிக்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தென்காசி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 75% நிறைவடைந்துள்ளன.
கன்னியாகுமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ரூ.6,448 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து முடிவெடுக்கும்
இ-பாஸ் நடைமுறையை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. கரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்தை இயக்குவது குறித்து அறிவிக்கப்படும்' என்றார்.