சென்னை: ரஷியாவில் ஆற்றில் சிக்கி உயிரிழந்த தமிழக மாணவா்கள் நான்கு பேரின் உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
ரஷிய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆஷிக், கடலூரைச் சோ்ந்த விக்னேஷ், சேலத்தைச் சோ்ந்த மனோஜ், சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்டீபன் ஆகியோா் பயின்று வந்தனா். அவா்கள் நான்கு பேரும் கடந்த 8-ஆம் தேதியன்று ரஷியாவில் உள்ள வோல்கா ஆற்றில் குளித்த போது, எதிா்பாராத விதமாக சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்தச் செய்தியை அறிந்தவுடன், இந்தியத் தூதரக அதிகாரிகளோடு தொடா்பு கொண்டு உயிரிழந்த மாணவா்களின் உடல்களை அவரவா் சொந்த ஊா்களுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க அரசு உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவுப்படி தேவையான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் தமிழக அரசு உயா் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.