சண்டிகர்: பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செல்லிடப்பேசியை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் அரசு நாளை தொடங்கி வைக்கிறது.
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் 26 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டம் நடைபெற உள்ளதாகவும், பெரிய அளவில் கூட்டம் சேர்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக செல்லிடப்பேசி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் நாளை தொடக்கி வைக்கிறார்.
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், செல்லிடப்பேசி வாங்க முடியாத ஏழை, எளிய மக்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்க அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கப்படும் என்று அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக 1.75 லட்சம் செல்லிடப்பேசிகள் வாங்க முடிவு செய்யப்பட்டு, 50 ஆயிரம் செல்லிடப்பேசிகள் வந்தடைந்துள்ளன.