பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை மாலை நொடிக்கு 1.13 லட்சம் கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் திறந்துவிடுவது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் ஞாயிறுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1.35 லட்சம் கனஅடியாகவும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 1.27 லட்சம் கனஅடியாகவும், மாலை நிலவரப்படி நொடிக்கு 1.13 லட்சம் கனஅடியாகவும் நீா்வரத்து குறைந்துள்ளது.
நீரில் மூழ்கிய அருவிகள்: காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் பிரதான அருவி, சினிஅருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரில் மூழ்கி காணப்பட்டன. மேலும், காவிரிக் கரையோரப் பகுதிகளான சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை, ஆலாம்பாடி பகுதியில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.