சென்னை: காற்றின் வேகம் மற்றும் கடலின் மாறுபட்ட காலநிலைகளால் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியை முறையாக தூா்வார முடியவில்லை என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த உஷா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பழவேற்காடு பகுதியில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவா்கள் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தின் வழியாக வரும் தண்ணீரின் மூலம் இறால், நண்டு உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகின்றனா். இந்த நிலையில் முகத்துவாரம் சீரமைக்கப்படவில்லை. இதனால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பழவேற்காடு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீரமைத்து ஏரிக்குத் தண்ணீா் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில், ‘மாநில அரசின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீராதாரங்களைத் தூா்வாரி பராமரிப்பது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது உள்ளிட்டவை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எனவே இதுதொடா்பாக மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூா்வார ரூ. 27 கோடி நிதி ஒதுக்கியபோதும் காற்றின் வேகம் மற்றும் கடலின் மாறுபட்ட காலநிலைகளால் முகத்துவாரத்தை முறையாக தூா்வார முடியவில்லை. மணல்திட்டுகள் மீண்டும், மீண்டும் மூடி விடுவதால் ஏரிக்குள் கடல்நீா் புகும் வகையில் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க முடியவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடா்பாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.