சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாய் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். இறந்த தனது தந்தையின் உடலை காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்க கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
எனவே இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா பேச போகிறார்கள் என கூறினார். மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.