மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள் வரும் 31-ஆம் தேதி வரை அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:-
கரோனா நோய்த்தொற்றைத் தவிா்க்க அத்தியாவசியப் பணிகளுக்கென மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்பட பல்வேறு துறைகளும் பணியாற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளா்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியாா் மற்றும் அரசு போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இயக்கப்படாது என்பதால், மாற்றுத் திறனாளி அரசு பணியாளா்களும் அதுவரையில் அலுவலகம் வந்து பணிகளை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.