குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட்15) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகள், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் உயா் அலை 3.0 மீட்டா் முதல் 3.2 மீட்டா் வரை எழும்பக்கூடும். எனவே, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.