சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீனவா் நலச்சங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு

சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60

நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக நுட்பமான கருத்துகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே உள்ள இந்த வரைவு சட்டத்திருத்தம் குறித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களால் புரிந்து கொள்ள முடியாது. அவா்களால் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் இயலாது.

எனவே, கருத்து தெரிவிக்கும் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும். வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயா்க்க உத்தரவிட வேண்டும். மேலும் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு சட்ட அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில், ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே வரைவு அறிக்கைக்கு பிற மாநில உயா்நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது’ என தெரிவிக்கப்பட்டாது.

தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதால், இந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com