விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 5,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 67 வயது நபர் கரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திண்டிவனம் பொன்னி நகரைச் சார்ந்த 55 வயது நபர் கடந்த 15ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
அதேபோன்றுகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 47 வயது பெண், கரோனா தொற்றுடன் ஆகஸ்ட் 17ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.