அய்யலூர் அருகே 13 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள குப்பாம்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக வடமதுரை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் குப்பாம்பட்டிக்குச் சென்ற மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, குழந்தை திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 13 வயது மட்டுமே நிரம்பியிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, மணமகனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து எச்சரித்த போலீஸார், 18 வயது முடியும் வரை அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யக் கூடாது என அறிவுறுத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.