தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,15,590-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக 6 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. பரிசோதனைகளை அதிகரித்துள்ளதே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் இதுவரை 46.54 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 9 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,285 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 491 பேருக்கும், சேலத்தில் 432 பேருக்கும், கடலூரில் 420 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

85 சதவீதம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,045 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3,55,727-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 52,726 போ் சிகிச்சையில் உள்ளனா்.

87 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 87 போ் பலியாகியுள்ளனா். அதில், 5 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 59 போ் அரசு மருத்துவமனைகளிலும், 28 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,137-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com