மரம் நட மக்களை ஊக்குவிக்கும் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மரக்கன்றுகளை நட மக்களை ஊக்குவிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் நூதன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பிறந்த நாள், திருமண நாளில் தங்கள் வீட்டில் மரக்கன்று நடும் படத்தினை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவிப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்துள்ளார்.
வைத்தீஸ்வரன் கோயில் வனம் என்னும் பசுமை நகரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் வீடுகளில் மரக்கன்றுகள் நட வைக்க இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
இதன் படி பொது மக்கள் பிறந்த நாள் அல்லது திருமண நாளில் தங்கள் வீடுகளில் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டு அந்த மரம் நடும் படத்தினை பேரூராட்சி முகநூல் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
மரக்கன்று தேவை படுவோருக்கு மரக்கன்றும் மற்றும் இயற்கை உரமும் பேரூராட்சியால் இலவசமாக வழங்கப்படும். பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
அதுபோல் குப்பையில் வரும் எண்ணெய், பால் பாக்கெட்டுகளில் விதைகள் இட்டு மரக்கன்றுகள் விலையின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சி முகநூல் பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் நகர மக்கள் மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலில் பிறந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பலர் இணைந்துள்ளதால் மரக்கன்று நடும் படம் பதிவிட பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்துள்ளார்.