ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஜாதகம் பார்ப்பதற்காக கணவருடன் சென்ற மனைவி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். கணவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தியூர் அருகேயுள்ள குருவரெட்டியூர், அஞ்சலக வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (56). இவரது மனைவி ஆதிலட்சுமி (52). இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பட்லூர் - பவானி சாலையில் ஒலகடம் வழியாக சென்று கொண்டிருந்தனர். குட்டைமேடு அருகே சென்றபோது, அதிவேகமாக பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி, கணவன் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார். சதாசிவம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.