பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே உள்ள சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
அதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கு, வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்துக்குள் வர கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரியில் இருந்து பிற மாவட்டத்துக்கு இ-பாஸ் இன்றி செல்லலாம். நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகளை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.